எனக்கு மூலம்(Piles) நோய் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேரால் சங்கோஜப் படாமல் வெளியில் சொல்ல முடியும். பல உடல் ரீதியான பிரச்சனைகளை போலவே மூல நோயும் ஒரு முக்கியமான பிரச்சனைதான்.
ஏன் இந்த மூல நோய் வருகிறது, இதை எப்படி தடுப்பது? (Tips to Reduce Piles Pain in Tamil) இதை பற்றிய முழு விவரங்கள் என்ன என்பதைதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
முதலில் செரிமான மண்டலம் செயல்பாடு, இரண்டாவது ஏன் மூல நோய் வருகிறது, மூன்றாவது எப்போது மருத்துவரை அணுகுவது நான்காவது என்ன மாதிரியான சிகிச்சைகள் எடுத்துகொள்ள வேண்டும், ஐந்தாவது எப்படி இந்த மூல நோய் வராமல் தடுப்பது (Tips to Reduce Piles Pain) என்பதை தெரிந்துகொள்வோம்.
முதலாவது செரிமான மண்டலம்
நாம் எடுத்துகொள்ளும் உணவு பயணம் பற்றி அறிந்தால் தான் செரிமானம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
நமது வாய்வழியாக உள்ளே செல்லும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதியை அடைந்து முதலில் ஜீரணத்துக்கான பணியை தொடங்க சிறுகுடல் அடைகிறது. பிறகு பெருங்குடலுக்குள் நுழைகிறது.
பெருங்குடலுக்கு நுழையும் ஆரம்ப பகுதி Cecum அழைக்கப்படுகிறது. இது வயிற்றின் இடுப்பின் வலது பக்கத்தில் உள்ளது.
இதன் பக்கத்தில் தான் அப்பெண்டிக்ஸ் உள்ளது. இந்த Cecum என்னும் ஆரம்ப பகுதியிலிருந்து உணவு பெருங்குடலுக்குள் மேலே போகிறது.
இந்த பகுதியை ஏறு பெருங்குடல் (ascending colon) என்று அழைக்கிறோம். அப்படியே உணவு மேலே சென்று வலதுபுறம் திரும்பும் இடத்தில் கல்லீரல் இருக்கும். அந்த இடத்தை கல்லீரல் திருப்பம் (Hepatic Flexure) என்று அழைக்கிறோம்.
இந்த இடத்தை தாண்டிமேல்பெருங்குடல் (Transverse Colon) வழியாக உணவு பயணித்து இடது பக்கமாக திரும்பும் இடம் Splenic ஆகும். இந்த இடத்தில் திரும்பும் இடம் Splenic Flexure என்று அழைக்கப்படுகிறது.
இது இடது புறம் தாண்டி கீழ் நோக்கி இறங்கி வரும் நிலையில் குடல் (Descending Colon) வழியாக வந்து இறுதி கட்டத்தை அடையும்.
இது சிக்மாய்டு பெருங்குடல் (sigmoid colon ) அடைந்து இறுதியாக ரெக்ட்டம் (Rectum) என்ற பகுதியில் சென்று இறுதியாக முடியும்.
எப்படி சிறுநீரை சிறுநீர்ப்பை சேமித்து வைத்து வெளியேற்றுகிறதோ அப்படித்தான் ரெக்ட்டம் என்ற பகுதியும் மலத்தை சேமித்து வைக்கிறது. இதிலிருந்து தான் ஆசனவாய் வழியாக மலம் வெளியேறுகிறது.
இந்த செயல்பாட்டில் குடல் பகுதி முழுமையும் Lumen (சிறிய ஓட்டை போன்ற அமைப்பு என்று வைத்துகொள்ளலாம்) உள்ளது. இதன் மேற்பகுதி Mucosa என்று சொல்லலாம்.
இவை இரண்டும் தான் நாம் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுக்கின்றன. இதுதான் சீரான உணவு செரிமான, வெளியேறும் நிகழ்வு.
இதில் எங்கு இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு மூல நோய் ஆசன வாயை பாதிக்கிறது என்று பார்ப்போம்.
மூலநோய் (Hemorrhoids)
இந்த anal canal தான் குடலின் இறுதியில் ரெக்ட்டம் பகுதியில் வரும் கழிவுகளை ஆசன வாய் குழாயில் மலக்குடல் பகுதிகளில் வெளியேற்றும். இந்த ஆசனவாயை பொறுத்தவரை உட்புற பாகம் மற்றும் வெளிப்புற பாகம் என்று இரண்டு உள்ளது.
ஆசனவாய்க்கு மேலிருக்கும் பகுதியிலும், கீழிருக்கும் பகுதியிலும் Vascular Cushions என்று ஒரு பகுதி உள்ளது.
இவைதான் நமது ஆசன வாயில் உள்ள ரத்தக்குழாய்கள். இந்த ரத்தக்குழாய்கள் வீங்கி உள்ளே அல்லது வெளியே வீங்கி உருண்டை வடிவில் உருவாவதைதான் நாம் மூலம் என்கிறோம்.
மூலம் வரக்காரணம்?
மூலநோய் வருவதற்கான முதல் காரணம் மலச்சிக்கல்தான். நமது குடல்பகுதி கடல் அலைகளை போல செயல்படும்.
நாம் உண்ணும் உணவுகளின் சத்துக்களை உறிஞ்சிவிட்டு அதன் கழிவுகளை அலைகள் போல அசைந்து அசைந்து வெளியேற்றும். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது Peristalsis என்ற அமைப்புதான்.
இந்த அமைப்பு பாதிக்கப்படும்போதுதான் நாம் மலச்சிக்கலை எதிர்கொள்கிறோம். இது எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறது.

மலச்சிக்கல் வர முதல் காரணமாக இருப்பது குறைவாக தண்ணீர் குடிப்பதால் நமது உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை. இரண்டு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களை நாம் எடுத்துக்கொள்வதில்லை. அதுமட்டுமன்றி அதிகமான ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா, கொழுப்பு நிறைந்த உணவுகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வதாலும் நமது உடலில் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
இதைத்தாண்டி அதிக உடல் எடை, கர்ப்பகாலத்தில் மேலுடலின் எடை அதிகரித்தல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும் பழக்கம் உள்ளிட்டவைதான் மலச்சிக்கல் ஏற்பட காரணங்களாக இருக்கின்றன.
இப்படி மலச்சிக்கல் ஏற்படும்போது உங்களது மலம் கெட்டியாகி வெளியேற சிரமமாக இருக்கும். அப்போது நீங்கள் மலத்தை வெளியேற்ற இயல்பை விட அதிகமான அழுத்தம் தர வேண்டியிருக்கும்.
அப்படி அழுத்தம் தரும்போது மலம் உங்கள் ஆசனவாயில் உள்ள ரத்தக்குழாய்களை அழுத்துவதால் அது வீக்கமடையும். வீக்கமடைந்து அது அந்த இடத்தை விட்டு சரியவோ அல்லது ரத்தக்கசிவு ஏற்படவோ வாய்ப்புண்டு. இப்படித்தான் மூல நோய் உருவாகிறது.
மூலநோயில் வெளிப்புறம் உட்புறம் என இரண்டு வகை உள்ளது. வெளிப்புற மூலநோயில் வெளியில் வீக்கம் போல ஏற்படும். அதே உட்புற மூல நோயில் மலம் அதிக அழுத்தம் கொடுக்கும்போது ரத்தக்குழாய்கள் வீங்கும்.
இதில் முதல் டிகிரி என்று சொல்வது ரத்தக்குழாய் வீக்கம் திசுக்களை உருவாக்குவதை குறிக்கும். இதன் அடுத்தகட்டம் இரண்டாவது டிகிரி உட்புற மூலநோயில் மீண்டும் மீண்டும் கெட்டியான மலம் அதிகமான அழுத்தத்தை உட்புற ரத்தக்குழாயின் மீது போடும்போது அந்த திசுவும் சேர்ந்து சரிந்து மலத்தோடு வெளியே வந்து விடும்.
மலம் வெளியேறியவுடன் இது மீண்டும் பழைய இடத்துக்கே சென்று அமர்ந்து விடும்.
இதில் மூன்றாவது கட்டத்தில் வெளியே வரும் திசுக்களை நீங்கள் விரல்களை வைத்து அழுத்தி உள்ளே மீண்டும் அனுப்ப வேண்டி வரும். அடுத்து நாலாவது டிகிரியில் வெளியே தொங்கி கொண்டிருக்கும் திசுக்கள் தானாக உள்ளே அனுப்பவே முடியாது.
அதை விரல்களால் அழுத்தி தான் உள்ளே தள்ள முடியும்.
இதில் நான்காவது நிலையில் வெளியேறும் திசுக்கள் உள்ளே தள்ளவே முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் அவை வெளியில் தொங்கியபடி இருக்கும்.
மூலநோயின் அறிகுறிகள்
மலம் கழிக்கும்போது வலி, ஆசன வாய் மற்றும் குழாயில் சிறு சிறு கொப்பளங்கள், ஆசனவாயை சுற்றி இருக்கும் சருமம், எரிச்சல் மற்றும் அரிப்புத்தன்மையோடு இருத்தல், வலியுடன் கூடிய ரத்தம் மலம் கழிக்கும்போது வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி thrombosed மூலம் என்று ஒரு நிலை உள்ளது. இதில் உங்கள் மூல வீக்கத்தின் உள்ளே ரத்த கசிவு ஏற்பட்டிருக்கும். இதனால் அதிக வலியை உணர் நேரிடும்.
இது போன்ற நேரத்தில் உங்கள் மருத்துவர் உங்களுக்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து அந்த வீக்கத்தை சிறிது கிழித்து அந்த ரத்த கசிவை வெளியேற்றி விடுவார். இது உங்கள் வலியை போக்க உதவும்.
மூல நோய்க்கு மருத்துவர் அணுகுமுறை! (Tips to Reduce Piles Pain)
பலரும் ஆசனவாய் சார்ந்த பிரச்சனையை எப்படி வெளியே சொல்வது என்று தயங்கி தயங்கி இந்த பிரச்சனை தீவிரம் அடையும் வரை மருத்துவரை அணுகமாலேயே இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனையை எவ்வளவு சீக்கிரமாக மருத்துவரிடம் அணுகி சிகிச்சை எடுத்து கொள்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்து விடலாம்.
முதலில் மருத்துவர்கள் PR Examination என்று சொல்ல கூடிய PER Rectal சோதனையை மேற்கொள்ளுவார்கள். இதில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உங்கள் வெளிப்புற மற்றும் உட்புற வீக்கங்களை கைகளில் கிளவுஸ் அணிந்து ஜெல் தடவி முதலில் ஆசனவாய் பகுதியின் வெளியில் ஏதேனும் வீக்கமோ கட்டிகளோ தென்படுகிறதா என்று கவனிப்பார்கள்.
பிறகு ஒரு விரலை உள்ளே நுழைத்து வீக்கம் கட்டி உள்ளதா என்றும் பரிசோதனை செய்வார்கள். ஜெல் பயன்படுத்துவதால் வலி என்பது இருக்காது.
பிறகு, Sigmoidoscopy அல்லது Colonoscopy மூலம் சிக்மாய்டு அல்லது முழுக்குடல் பகுதி வரையிலும் ட்யூப் மூலம் கேமராவை அனுப்பி பரிசோதனை செய்வார்கள்.
இது மிக முக்கியம் இதன் மூலம் பெருங்குடல் முழுவதும் பரிசோதனை செய்வார்கள். பெருங்குடலில் எங்கேனும் அடைப்பு உள்ளதா, வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை பரிசோதிப்பார்கள்.
மூல நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்பது என்ன?
மேற்சொன்ன பரிசோதனைகள் முடிந்த பிறகு மருத்துவர் என்ன பரிந்துரைப்பார்கள் என்று எல்லோருக்கும் தயக்கம் இருக்கும். குறிப்பாக, எல்லாரும் எடுத்தவுடன் அறுவை சிகிச்சை என்று பயப்படுவதுண்டு.
ஆனால், எல்லாருக்கும் அறுவை சிகிச்சை எடுத்தவுடன் பரிந்துரைக்க படாது. முதலில் வீட்டிலிருந்தே என்ன செய்யலாம் அல்லது மருந்துகள் மூலம் சரி செய்யமுடியுமா என பார்ப்பார்கள்.
அதில் முதலில் வாழ்க்கைமுறையை மாற்றம் செய்ய சொல்வார்கள். குறிப்பாக 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைப்பார்கள். காய்கள், பழங்கள், கீரைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். திரவ ஆகாரங்கள் அதிகம் பரிந்துரைப்பார்கள்.
நீரை அதிகம் உறிஞ்சி உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடிய ஜங்க் உணவுகள், சோடா மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். மலம் இலகுவாக வெளியேற தேவையான மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

அதை தாண்டி SITZ Bath என்று சொல்லக்கூடிய ஒரு முறையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதில், பெரிய அகலமான பக்கெட்டில் மிதமான சூடுள்ள நீரை நிரப்பி விட்டு மருத்துவர் அளிக்கும் மருந்தை தேவையான அளவு (மருத்துவர் பரிந்துரைப்பார்) உங்களது ஆசன வாய் பகுதி அல்லது கீழ் உடல் முழுவதையும் அதில் நன்கு நினையுமாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.
இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட செய்யலாம். அதை தாண்டியும் வலி தாங்க முடியவில்லை, நோய் தீவிரமாக உள்ளது என்றால்தான் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பார்கள்.
மூலநோய் அறுவை சிகிச்சைகள்
முன்பெல்லாம் Rubber Band Ligation என்ற முறை இருந்தது. வீக்கம் இருக்கும் இடத்தில் லோக்கல் அனஸ்தீசியா மூலம் மரத்து போக செய்து விட்டு அந்த வீக்கத்தை ரப்பர் பேண்ட் மூலம் இறுக்கி வீக்கத்தை வெட்டி எடுத்து பின்னர் அங்கே தையல் போட்டு விடுவார்கள். ஆனால், சமீப காலமாக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வலியும் குறைவு, வெகு விரைவில் குணமாக முடியும். மருத்துவமனையில் இருக்க வேண்டிய நேரமும் உங்களுக்கு குறைவு என்பதால் இது பின்பற்றப்படுகிறது. லேசரை உள்ளே நுழைத்து வீக்கத்திற்கு செல்ல கூடிய ரத்தத்தை நிறுத்தி விடுவார்கள்.
இதனால், அந்த வீக்கம் சுருங்கி மறைந்து விடும். லேசர் தெரப்பி மூன்றாவது அல்லது நான்காவது டிகிரி நிலையில் இருக்கும் நபர்களுக்கு அல்லது வெளிப்புற வீக்கம் பெரியதாக உள்ளவர்களுக்கு அல்லது பல சிகிச்சை கொடுத்தும் பலனளிக்காத நபர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

மூலம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- அதிகமாக நீர் அருந்துங்கள்
- காய்கள், பழங்கள், நார்ச்சத்து உணவுகளை தினசரி எடுத்து கொள்ளுங்கள்
- ஒவ்வொரு முறை மலம் கழித்துவிட்டு வெளியேறும்போதும் உங்கள் ஆசனவாயை சுற்றியுள்ள பகுதிகளை டாய்லெட் பேப்பர் கொண்டு துடைத்து விடுங்கள்
- அதிக வலி இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் படி, Paracetamol மாத்திரையை கூட எடுத்து கொள்ளலாம்
- தினமும் SITZ Bath முயற்சி செய்யுங்கள்
- வலி இருக்கும் நேரங்களில் அந்த பகுதிகளில் ஐஸ் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்
- உங்களது உட்புற வீக்கம் சரிந்து வெளியே வருகிறது என்றால் கைகளை நன்கு கழுவி விட்டு அதை ஒரு விரல் மூலம் உள்ளே தள்ளி விடுங்கள்
- வாழ்க்கை முறையை மாற்றுதல், 45நிமிடம் தினசரி உடற்பயிற்சியும் அவசியம்
- மதுப்பழக்கம் மற்றும் காஃபின் எடுத்துக்கொள்வதை நிறுத்தி கொள்ளுங்கள்
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
மூலம் உள்ளவர்கள் என்ன செய்ய கூடாது?
- ஆசனவாயை சுற்றியுள்ள பகுதிகளை மிருதுவாக கையாள வேண்டும். மலம் கழித்துவிட்டு அந்த இடத்தை துடைக்கும்போது கடினமாக கையாளாமல், மிருதுவாக துடையுங்கள்
- மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தி வைக்காமல் உடனடியாக மலம் கழித்து விடுங்கள். காரணம் நீங்கள் அதை நிறுத்தி வைக்கும்போது அது இன்னும் கடினமான கெட்டியான மலமாக மாறி விடுகிறது
- மலம் வரவில்லை என்றால் அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள்
- இருமல் சிரப், கால்சியம் மாத்திரைகள், வலி மாத்திரைகள் கூட மலச்சிக்கலை ஏற்படுத்தும். அது போன்ற சூழலில் மருத்துவர் பரிந்துரையோடு சரியான மாத்திரைகளை மாற்றிக்கொள்வது நல்லது