சுகப்பிரசவம் என்பது அறுவை சிகிச்சை இல்லாமல் பெண் உறுப்பு வழியாக குழந்தை பிரசவிக்கும் நிலை ஆகும். இது எளிதாக இயற்கையாக நடக்க வேண்டுமெனில் பெண்ணின் இடுப்பு எலும்புகள் வளைந்து கொடுக்கும். பிரசவ கால வலியை மட்டுமே பெண் அனுபவிப்பாள்.
இது தாய் சேய் இருவரது ஆரோக்கியத்தையும் பாதுகாக்க செய்யும். எனினும் சுகப்பிரசவம் என்பது பெண்ணின் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு தான் செய்யப்படும். பிரசவ நேரத்தில் பெண்ணுக்கு அரிதாக வேறு ஏதேனும் சிக்கல் உண்டாகுமாயின் அப்போது மருத்துவர்களே அறுவைசிகிச்சைக்கு ஆலோசனை சொல்வார்கள்.
ஒரு பெண் முதல் முறை கருற்று இருந்து பிரசவம் சுகமாக இருந்தால் அடுத்த பிரசவமும் சுகப்பிரசவமாகத்தான் இருக்கும். ஆனால் சுகப்பிரசவம் தான் நடக்கும் என்று அலட்சியமாக இருப்பது சமயத்தில் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லும்.
சில பெண்களுக்கு முதல் பிரசவம் அறுவை சிகிச்சை ஆனாலும் இரண்டாவது சுகப்பிரசவம் ஆகிவிடக்கூடும். இவை எல்லாமே கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் பொறுத்து பிரசவக்காலத்தில் உண்டாகும் மாறுபாட்டை பொருத்தவை.
சரி இந்த சுகப்பிரசவத்துக்கு உதவும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
கருவுற்ற எல்லா பெண்களுமே பிரசவம் சுகமாக நிகழவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதற்கு உதவகூடிய விஷயங்களில் முதன்மையானது கருவுற்ற பெண்ணின் உடல் நிலை. கருவுற்றிருக்கு பெண்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருவுறுவதற்கு முந்தைய நிலையில் ஆஸ்துமா, தைராய்டு, வேறு நோய்கள் இருப்பவர்கள் கருவுற்ற காலம் முழுக்க அதிக கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
ஆரோக்கியமான பெண்கள் கருவுற்ற பிறகு கர்ப்பகால நோய்கள் எதையும் வராமல் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பகால நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை வராமல் தவிர்க்க வேண்டும். அதே போன்று கர்ப்பகால தற்காலிக நோய்களான இவை வந்தாலும் கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் சராசரியான உடல் எடையை கொண்டிருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தும் அளவுக்கு உடல் எடையை சரியாக கொண்டிருக்க வேண்டும். அதில் அதிகமாக உடல் எடை பெறுவதும், மிக குறைவான உடல் எடையை கொள்வதும் இரண்டுமே சுகப்பிரசவத்தில் சிக்கலை உண்டாக்கும். அதனால் கருவுற்ற காலத்தில் பிரசவம் சுகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் உடல் எடையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
போதுமான வைட்டமின்கள் கருவின் வளர்ச்சிக்கும், தாயின் ஊட்டச்சத்துக்கும் உதவும். ஒரு பெண் கருவுற்ற உடன் மருத்துவரை அணுகி என்னென்ன ஊட்டச்சத்துகள் எவ்வளவு அளவில் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்து அதை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். இந்த சத்துகுறைபாடு கரு வளர்ச்சி குறைபாடு, குறைபிரசவம் போன்ற சிக்கல்களை உண்டாக்கிவிட செய்ய வாய்ப்புண்டு. சுகப்பிரசவம் தேவை என்று நினைப்பவர்கள் அவசியம் தவிர்க்காமல் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
உடலுக்கு பயிற்சி அவசியம். உடல் உழைப்பும் கூட கர்ப்பகால இறுதியில் பிரசவத்தை சுகமாக்க உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பலவீனமான , செயற்கை கருத்தரிப்பு போன்ற பெண்கள் மட்டும் மருத்துவரின் அறிவுரையோடு எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மற்ற அனைவருமே கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
கர்ப்பினிகள் செய்ய வேண்டிய பயிற்சிகள் யோகா, மூச்சு பயிற்சி, உடல் பயிற்சி போன்றவற்றை தேர்வு செய்து மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் வழிகாட்டுதலில் பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில் நடைபயிற்சி பழக வேண்டும்.
இதனால் கர்ப்பகாலத்தில் உண்டாகும் தசைவலி, இடுப்பு வலி, கால் வலி போன்ற உபாதைகள் குறையகூடும். உடற்பயிற்சி இடுப்பு எலும்பை வலுப்படுத்தி சுகப்பிரசவத்தை தூண்டக்கூடும்.
கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் உண்டாவதற்கு வாய்ப்பு இருந்தாலும் அதில் இருந்து தள்ளி இருப்பதே பாதுகாப்பானது. மனதுக்குஅமைதி தரும் இசையை கேளுங்கள்.நகைச்சுவை ததும்பும் புத்தகங்களை படிக்க செய்யுங்கள். சூழ்நிலை எப்போதும் இனிமையாக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். உங்களிடம் சச்சரவுகளை உண்டாக்கும் நபர்களிலிருந்து தள்ளி நின்று மன அழுத்தம் இல்லாமல் வைத்துகொள்ளுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
பிரசவம் குறித்த பயமோ, குடும்ப பிரச்சனை, பொருளாதாரம் போன்றவற்றை தள்ளி வையுங்கள். எப்போதும் பாஸிட்டிவ் எனர்ஜியோடு இருங்கள். பிரசவம் குறித்த எதிர்ம்றையான தகவல்களை கேட்காதீர்கள். அதே நேரம் கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு மாதமும் உங்கள் உடல் நிலை கருவின் வளர்ச்சி போன்ற தகவல்களை நம்பகம் வாய்ந்த மருத்துவ புத்தகங்கள் அல்லது மருத்துவரிடமும் விவாதிக்க செய்யுங்கள்.
வீட்டில் வயது முதிர்ந்த அனுபவசாலிகளிடமும் கேளுங்கள். இதன் மூலம் பிரசவ வலி பொய்வலி, குழந்தையின் அசைவு போன்ற விஷயங்களை அறியலாம். கர்ப்பகாலத்தில் எப்படியெல்லாம் நடந்துகொள்ளலாம் என்பதையும் அறிய முடியும்.
மிக முக்கியமாக உங்கள் பிரசவக்கால மருத்துவரை தேவு செய்வது இன்னும் அவசியம். அனுபவிக்க மருத்துவரை தேர்வு செய்வதோடு பிரசவக்கால வசதிகளை கொண்டிருக்கும் மருத்துவமனையாக தேர்வு செய்யுங்கள். கருவுற்றது முதல் கர்ப்பகாலம் வரை ஒரே மருத்துவராக இருந்தால் மிகவும் நல்லது.
அப்போதுதான் கர்ப்பகாலம் முழுக்க உங்கள் உடல் ஆரோக்கியம், மருத்துவ வரலாறை மருத்துவர் அறிந்து கொள்ள முடியும். பிரசவக்காலம் சிக்கலில்லாமல் நடக்க உதவும். இதையெல்லாம் சரியாக கடைப்பிடித்தால் பிரசவம் இனிதாகவே சுகப்பிரசவமாகலாம்.