குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை வளர்ப்பு முறையில், பராமரிக்கும் முறையில், உணவளிக்கும் முறையில் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு முதல் குழந்தையாக இருந்தால் இந்த குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு உதவும்.
குழந்தை பராமரிப்பில் செய்யகூடாத விஷயங்களில் தாய்ப்பால் அளிப்பதில் இருந்து தொடங்கலாம்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலை
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சுலபமானதாக தெரிந்தாலும் மிகப்பெரிய சவால்களில் இதுவும் ஒன்று. குழந்தைக்கும் அம்மாவுக்கும் அன்பான பிணைப்பை உண்டாக்கும் நிகழ்வில் முதன்மையானது தாய்ப்பால் தான். தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் குறித்து பெரும்பாலான அம்மாக்கள் தெரிந்து கொள்வதில்லை. பிரசவத்துக்கு பிறகு சரியான நிலையில் தாய்ப்பாலூட்டும் முறையை கற்றுகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் போது வலி என்பது அசெளகரியமாக இருக்கிறது என்று தாய்ப்பாலை தவிர்க்க கூடாது. மோசமான தாய்ப்பாலூட்டும் நிலை முதல் மார்பக பிடிப்பு குழந்தை மார்பக காம்புகளை பற்றுதல் போன்றவற்றில் எக்காரணம் கொண்டும் குறையில்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பாலூட்டும் போது சரியான நிலையில் உட்கார்ந்தபடிதான் பாலூட்ட வேண்டும். படுத்துகொண்டே பால் கொடுக்க கூடாது. கைகளை சுத்தம் செய்யாமல் குழந்தையை தூக்க கூடாது. ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பகத்தையும் மார்பு காம்புகளையும் நன்றாக சுத்தம் செய்த பிறகு தான் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுக்கலாமா?
குழந்தை பிறந்ததும் சர்க்கரையை நீரில் கரைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் இந்த சர்க்கரை நீர் பழகக்கூடாது. இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் போகலாம்.
குழந்தைக்கு தண்ணீர் எப்போது கொடுக்கலாம்?
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதங்கள் ஆகும் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது என்பது தான் மருத்துவர்களது எண்ணம். குழந்தைக்கு வேண்டிய அத்தனை ஊட்டச்சத்துக்களும் இதிலேயே உண்டு. தண்ணீர் கூட தாய்ப்பாலிலேயே இருப்பதால் குழந்தைக்கு தனியாக தண்ணீர் தர வேண்டியதில்லை. பிறகு தான் குழந்தைக்கு படிப்படியாக காய்கறிகள், பழங்கள், உணவுகள் என்று திரவ திட உணவுகளை தொடங்க வேண்டும்.
குழந்தைக்கு டயபர் உபயோகிக்கும் முறை
குழந்தை பிறந்தவுடன் டயபர் கட்டிவிடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் குழந்தைக்கு டயபர் அணிவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் வெளியில் செல்லும் போது இதை அணிவிக்கலாம். அப்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தை டயபரை நனைக்காவிட்டாலும் மாற்றிவிடுவது நல்லது. எந்த வகை டயபராக இருந்தாலும் குழந்தையின் அந்தரங்க உறுப்பை வெதுவெதுப்பான நீரில் நனைத்து சுத்தம் செய்த பிறகே மாற்ற வேண்டும். அந்த இடத்தில் ஈரமாக வைத்திருக்க வேண்டாம்.
குழந்தை வளர்ந்த பிறகும் ஒரு வயது வரையிலும் டயபர் உடன் பழக்க கூடாது. குழந்தைகளுக்கு ரேஷஷ் பிரச்சனை வரும் வரை அலட்சியம் கூடாது.
குழந்தையை குளிக்க வைக்கும் போது கவனிக்க வேண்டியவை
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி சில வாரங்களில் தானாகவே உலர்ந்து கீழே விழும். நீங்களாக அதை வெளியேற்ற கூடாது.
குழந்தையை குளிக்க வைக்கும் போது அதிக சூட்டில் குளிக்க வைக்க கூடாது. மிதமான சூட்டில் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைக்கு அதிகமாக சோப்பு போடுவது, ஷாம்பு பயன்படுத்துவது, நீண்ட நேரம் பாத் டப்பில் இருக்க வைப்பது எல்லாமே தவிர்க்க வேண்டும். குழந்தையை குளிக்க வைத்த பிறகு உடல் முழுக்க பவுடர் அள்ளி பூசுவதும் தவிர்க்க வேண்டும்.
குழந்தையின் முகத்தை அழுத்தி தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் குழந்தையின் வாயில் ஊதுவார்கள். இதனால் கிருமிகள் பரவக்கூடும். இயன்றவரை குழந்தையை மென்மையாக கையாள்வது நல்லது.
குளிப்பதற்கு முன்பு குழந்தைக்கு மசாஜ் செய்வது நல்லது என்றாலும் அதிகமாக எண்ணெய் விட்டு குழந்தையின் உடலில் அழுத்தமாக தேய்க்கவும் கூடாது. குழந்தையின் சருமம் மென்மையானது கடினமான துணியால் துவட்டாமல் மென்மையான பருத்தி துணியை கொண்டு குழந்தையை துவட்டலாம்.
பிறந்த குழந்தைக்கு சாம்பிராணி பயன்படுத்தலாமா?
- குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டிய பிறகு மூக்கு அடைக்க சாம்பிராணி புகை போடும் வழக்கம் உண்டு. கண்டிப்பாக அதை செய்யவே கூடாது.
- டவலில் திரியை உண்டாக்கி குழந்தையின் மூக்கில் விட்டு தும்மல் வரச்செய்வார்கள். துணியில் கிருமிகள் இருந்தால் அவை உள்ளே செல்ல வாய்ப்புண்டு.
- குழந்தையின் காதில் தண்ணீர் போகாமல் குளிக்க வைக்க வேண்டும். காதுக்குள் எக்காரணம் கொண்டும் காதுகுடையும் குச்சி போட்டு சுத்தம் செய்ய கூடாது.
பிறந்த குழந்தையை தூக்கும் போது கவனிக்க வேண்டியவை
குழந்தைக்கு தலையும் கழுத்தும் வலுவாக இருக்க 4 முதல் 5 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை குழந்தையை சிறு பிள்ளைகளிடம் கொடுக்க வேண்டாம். கவனக்குறைவாக குழந்தையை தூக்கும் போது கழுத்து தலை தசைபகுதியில் வலியை உண்டாக்கலாம்.
எல்லா நேரமும் குழந்தையை கைகளில் வைத்திருக்க கூடாது. இதனால் குழந்தைக்கு உடல் வலி இருக்கும். தாய்ப்பால் கொடுத்த பிறகு குழந்தையை படுக்கையில் கிடத்துவது நல்லது.
பிறந்த குழந்தைக்கு நகங்கள் எவ்வாறு வெட்டுவது?
குழந்தை கை கால்களை அசைக்க தொடங்கும் போது விரல் நகங்களால் முகத்தை கீறி கொள்வார்கள். மென்மையான சருமம் என்பதால் முகத்தில் ரத்தம் வரலாம். ரத்தநிறம் கொண்டிருக்கலாம். நகங்களை கட்டர் கொண்டு எடுக்க வேண்டாம். மென்மையான நகங்கள் என்பதால் பாதிக்க வாய்ப்புண்டு.
பிறந்த குழந்தையின் தூக்கம்
குழந்தையை தூங்க வைக்கும் போது பருவ காலத்துகேற்ப படுக்கையை தேர்வு செய்வது அவசியம். கோடைக்காலமாக இருந்தால் பருத்தி துணிகளை கனமாக போட்டு குழந்தையை காற்றோட்டமாக படுக்க வைக்கலாம். குளிர்காலத்திலும் சற்று கனமான தடிமனான படுக்கை போதுமானது. குழந்தை வளர வளர நகர்ந்துவருவார்கள் என்பதால் உயரமான இடத்தில் படுக்கை அமைக்க கூடாது.
குழந்தையை மெத்தையில் படுக்க வைக்க கூடாது. தூளியில் அல்லது தொட்டிலில் தூங்க வைக்கலாம். இதனால் தூக்கம் கெடாமல் பார்த்துகொள்ளலாம். குழந்தையை ஏஸி அறையில் படுக்க வைக்கவும் கூடாது. அறை வெப்பநிலை மிகவும் முக்கியம். குழந்தையை அறைக்குள் வைத்திருக்க கூடாது. குழந்தையின் அறையில் சூரிய வெளிச்சம் வராமல் தவிர்க்க கூடாது.
குழந்தையை கொஞ்சுதல் கவனிக்க வேண்டியவை
குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் குழந்தையை பெற்றோர்கள் தவிர வேறு யாரும் நெருக்கமாக வைத்திருக்க கூடாது. குறிப்பாக தொற்று பரவும் நோய்களை கொண்டவர்களிடம் குழந்தையை தர கூடாது. பெற்றோர்களாக இருந்தாலும் குழந்தைக்கு முத்தம் கொடுக்க செய்யகூடாது. குறிப்பாக முகத்தில் முத்தம் தரக்கூடாது. குழந்தையை அழுக்கு கைகளோடு தூக்கி கொஞ்ச கூடாது. குழந்தையை உயரே தூக்கி பிடிக்கவும் கூடாது.
பிறந்த குழந்தையை உட்கார வைப்பது சரியா?
குழந்தைக்கு தலை கழுத்து வலுவானதும் குழந்தையை மூளையில் உட்கார வைக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு ஆனால் அப்படி செய்தால் குழந்தையின் முதுகுத்தண்டு பாதிக்கலாம். குழந்தை தானாக நடந்து உட்காரும் வரை நீங்களாக அவர்களை சுவற்றில் சாய்த்து உட்கார வைக்க கூடாது.
பிறந்த குழந்தையின் ஆடைகளில் கவனிக்க வேண்டியவை
இது மிக மிக முக்கியம். குழந்தைக்கு கற்கள் வைத்த ஆடைகள், நைலான் ஆடைகள் தவிர்க்க வேண்டும். வியர்வை உறிஞ்சாத இந்த ஆடைகள் குழந்தையின் சருமத்தில் கட்டிகளை உண்டாக்கலாம். சருமத்தை உறுத்தாத மென்மையான ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடைகளில் பட்டன் வேலைப்பாட்டுடன் கூடிய பொம்மைகள் இருக்க கூடாது. குழந்தை விளையாட்டு போக்கில் அதை வாயில் போட வாய்ப்புண்டு.
குழந்தைக்கு கச்சிதமாக இருக்கட்டும் என்று ஆடைகள் அணியக்கூடாது. நெகிழ்வான ஆடைகள் இருக்க வேண்டும். பருத்தி ஆடைகள் எப்போதும் பாதுகாப்பானவை.
பிறந்த குழந்தைக்கு அழகு பராமரிப்பில் கவனிக்க வேண்டியவை
குழந்தையை அழகாக்குகிறேன் என்று க்ரீம் வகைகள், டியோடரண்ட், வாசனை திரவியம் போன்றவற்றை பழக்க கூடாது. இதனால் சருமம் அலர்ஜி, பாதிப்பு உண்டாகலாம். குழந்தைக்கு முடி அலங்காரமும் செய்ய கூடாது. குறிப்பாக முடியை இறுக்கும் க்ளிப், ரப்பர் பேண்ட் போன்றவை வலியை உண்டாக்கும்.
குழந்தை அடியெடுத்து வைக்கும் போது கவனிக்க வேண்டியவை
குழந்தை அடியெடுத்து வைத்ததும் நடைப்பயிற்சி பழகுவது உண்டு. ஆனால் படிக்கட்டுகள் இருக்கும் இடங்கள், உயரமான இடங்களில் இருப்பவர்கள் குழந்தையை தனியாக விடக்கூடாது.
குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை
குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது மாசு படாமல் பார்த்துகொள்ள வேண்டும். குழந்தையின் தலையை முழுவதும் கவர் செய்ய வேண்டும். கை கால்களை அப்படியே விடாமல் கை உறைகள், கால் உறைகள் அணிந்தபடி அழைத்து செல்ல வேண்டும். அதிக கூட்டம் உள்ள இடங்களிலும் குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். இதனால் தொற்றுகள் பரவ வாய்ப்புண்டு.
குழந்தைக்கு விளையாட்டு பொருள்கள்
குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்த பிறகு விளையாட்டு பொருள்கள் பழகுவதுண்டு. குழந்தைகள் பொருள்களை கைகளில் பிடித்து வாயில் வைப்பார்கள் என்பதால் அவர்களிடம் விளையாட்டுக்கு கொடுக்கும் பொருள்களை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொம்மைகள், கைகளுக்குள் அடங்கும் சிறு பொம்மைகள், சிறிய பாகங்களை கொண்ட பொம்மைகள், கூர்மையான பொருள்கள் போன்றவற்றைக் கொடுக்க கூடாது. அதே போன்று குழந்தை நான்கு காலில் நடக்கும் போது வீட்டில் சூடான உணவுகள், காயம் உண்டாக்கும் பொருள்கள் போன்றவையும் இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
குழந்தைக்கான உணவுகளில் கவனிக்க வேண்டியவை
குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை கொடுக்கவே கூடாத உணவுகள் என்னென்ன என்பதையும் கண்டிப்பாக பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
- குழந்தையின் செரிமான அமைப்பு குறைவாகவே இருக்கும் என்பதால் பொருந்தாத உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- தேன் குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கிவிடலாம். அதனால் குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை எந்த வகை உணவிலும் தேன் சேர்க்க கூடாது.
- தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் தவிர வேறு பால் சேர்க்க கூடாது.
- வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை எண்ணெய் சில குழந்தைக்கு ஒவ்வாமை உண்டாக்கலாம். அதனால் அதையும் தவிர்க்க வேண்டும்.
- குழந்தைக்கு இனிப்பு பிடிக்கும் என்று சாக்லேட் கொடுக்க கூடாது. முட்டையின் வெள்ளைக்கரு, வெளியில் விற்கப்படும் பழச்சாறுகள், எலுமிச்சை பானங்கள், சர்க்கரை அசைவத்தில் மட்டி இறால் போன்றவற்றை சேர்க்கவே கூடாது.
குழந்தைக்கு நொறுக்குத்தீனி கொடுக்கலாமா?
குழந்தைகள் காய்கறி நறுக்கும் போது அதை கையில் எடுத்து சாப்பிடுவார்கள். அம்மாக்களும் சத்து என்று கையில் ஒரு துண்டை கொடுப்பதுண்டு. ஆனால் பச்சை காய்கறியில் நைட்ரேட்டுகள் உள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் பச்சையாக கொடுக்க கூடாது. டீ அல்லது காஃபி குடிக்கும் போது குழந்தையின் நாக்கில் தடவும் பழக்கம் உண்டு. உங்களுக்கு அந்த பழக்கம் இருந்தால் இனி அதை செய்யாதீர்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றாலும் மருத்துவரின் அறிவுரையோடு சரியான உணவு பொருளை தருவதை உறுதி செய்யுங்கள். குழந்தை வளர்ப்பு முக்கியமானது செய்யகூடியவற்றுடன் செய்யகூடாதவற்றையும் அறிவது மிகவும் அவசியம்.