ஒரு பெண் கருவுற்ற பிறகு கர்ப்ப காலம் முழுக்க அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். குறிப்பாக கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில், ஏனெனில் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் தான் கருச்சிதைவு உண்டாக கூடும். இதை தவிர்க்க அதிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
கருச்சிதைவு எப்படி ஏற்படுகிறது?
கருச்சிதைவு என்பது பிரசவக்காலத்தை விட அதிக கடினமான காலம் என்று சொல்லலாம். கருச்சிதைவு கர்ப்பிணியின் உடலில் அதிக பாதிப்பை உண்டாக்க கூடியது. இந்த நாட்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக மாற்றங்களை சந்திக்க நேரிடும். கருச்சிதைவுக்கு பிந்தைய காலங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்துவார்கள்.
ஏன் கருச்சிதைவு அவ்வளவு அபாயகரமானதாக ஆகிறது என்று தெரிந்துகொள்வோம்.
கருவுற்ற உடன் குழந்தையை எதிர்நோக்கும் பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக கருச்சிதைவு உண்டாகும் போது அது மன ரீதியாகவும் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. இதிலிருந்து மீள்வது மிகப்பெரிய சவால் தான். கருச்சிதைவுக்கு ஆளான பெண்ணை சுற்றியிருப்பவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அன்பான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு இரண்டுமே அந்த பெண்ணை வேகமாக அதிலிருந்து மீட்டெடுக்க செய்யும். அப்படியான விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
ஓய்வு தான் முதல் மருந்து
பெண் கடினமான கட்டங்களை தாண்டி உடல் பலவிதமான அதிச்சிக்குட்பட்டு இருக்கும் இந்த நாட்களில் முதலில் கருச்சிதைவுக்கு உள்ளான பெண்ணுக்கு தேவை ஓய்வு தான். மருத்துவர் அறிவுறுத்தும் படி சரியான நேரம் ஓய்வில் இருப்பது அவசியம். மனதில் பலவிதமான குழப்பங்கள் வந்தாலும் போதுமான தூக்கத்தை கொள்வது மீட்புக்கு வழிவகுக்கும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
பொதுவாக கருச்சிதைவுக்கு பிறகு பெண்களுக்கு ரத்தக்கசிவு இருக்கும். அதிகமான ரத்தபோக்கு கொண்ட இந்த காலத்தில் உதிரபோக்கை வெளியேற்ற பயன்படுத்தும் பொருள்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்த காலங்களில் டேம்பன்களை காட்டிலும், நாப்கின் பயன்படுத்தலாம்.
அதே போன்று பெண் உறுப்பை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். சோப்பு, லோஷன், ஜெல் வகைகளை பயன்படுத்தாமல் மிதமான வெந்நீரில் அல்லது சுத்தமான நீரில் கழுவினால் போதும். இல்லையெனில் தொற்று உண்டாகும். இயன்றால் தினமும் இரண்டு முறை குளித்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்
உடலில் நீரிழிப்பு இருந்தால் அவை இன்னும் பாதிப்பை உண்டாக்க கூடும். போதுமான நீரை குடிக்க வேண்டும். உடலுக்கு நீரேற்றம் அதிகமாக இருக்க பழச்சாறுகள், சூப் வகைகள், இளநீர் போன்றவற்றை மாற்றி மாற்றீ எடுத்துகொள்ளலாம். இதனால் உடல் நீரிழப்பு உண்டாகாமல் தடுக்க முடியும்.
கருச்சிதைவு பிறகு சீரான இடைவெளியில் பரிசோதனைகள்
கருச்சிதைவுக்கு பிறகு மருத்துவர் சொல்லும் காலங்களில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் கருச்சிதைவுக்கு பின்பு எந்த ஒரு தொற்றூம் நேராமல் பார்த்துகொள்ள வேண்டும். இவை கவனிக்காமல் இருந்தால் கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருத்தரிப்பதை தடுக்க கூடும்.
அடி வயிற்றில் வலி இருக்க கூடும். இந்த காலம் அதிக வலியோடு கடக்க வேண்டிய காலம் என்பதால் இதை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு அவசியம். அந்த உணவுகளே உடலை மீட்க உதவும். இவை பிந்தைய கர்ப்பகாலத்தில் கருவுறுதலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் கொடுக்கும். இதனால் கருச்சிதைவுக்கு பிறகு பெண்கள் மீண்டும் கருத்தரிக்க அதிக வாய்ப்புண்டு.
என்ன மாதிரியான உணவுகள் கருச்சிதைவிலிருந்து மீட்க உதவும் என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக எந்த ஊட்டச்சத்துகள் தேவை என்பதை தெரிந்துகொள்வோம்.
கருச்சிதைவுக்கு பிறகு அதிக உதிரபோக்கை இழந்திருப்பீர்கள் இந்த காலத்தில் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உண்டாகியிருக்கும். இழந்த இரும்புச்சத்தை ஈடு செய்ய கோழி, கடல் உணவுகள்,முட்டை, அடர்ந்த பச்சை இலை காய்கறிகள், பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், எள், பூசணி விதைகள் போன்றவற்றை எடுத்துகொள்ள வேண்டும். கருச்சிதைவின் போது இழக்கும் மற்றொரு ஊட்டச்சத்து கால்சியம் ஆகும். கால்சியத்தை ஈடு செய்ய பால், பால் பொருள்கள், தயிர், பன்னீர், பச்சை காய்கறிகள், மீன், கொட்டைகள் போன்ற உணவுகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ளலாம்.
இதையும் தெரிந்து கொள்ள: டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன?
கருவுறும் போது தேவைப்பட கூடிய ஃபோலிக் அமிலம் ஆனது கருசிதைவுக்கு பிறகும் அவசியம் தேவைப்படும். கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருவுற திட்டமிடும் போது இந்த ஃபோலிக் அமிலம் அவசியம் தேவை. கீரைகள், ப்ரக்கோலி, பயறு வகைகள், பட்டாணி, கொட்டைகள், விதைகள் இலை காய்கறிகளில் ஃபோலேட் நிறைந்திருக்கிறது.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
வைட்டமின் சி இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வைட்டமின். வைட்டமின் சி குறைபாடில்லாமல் இருந்தால் அது உடல் உணவிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவக்கூடும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய், எலுமிச்சை, கொய்யா போன்றவற்றில் உண்டு.
தினம் ஒரு பழமாக இதை எடுத்துகொள்ளலாம். உடலுக்கு புரத சத்தும் அவசியம் தேவை. புரத உணவுகள் முட்டை, பருப்பு வகைகள், பால், சீஸ், தயிர், கடல் உணவுகள், பீன்ஸ் வகைகள், மெலிந்த கோழி இறைச்சி போன்றவற்றில் நிறைந்துள்ளது.
கருச்சிதைவுக்கு பிறகு நார்ச்சத்து இல்லாத கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் இது ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகள் என்பதால் உடலுக்கு மேலும் தீங்கு விளைவிக்க செய்யும்.
கருச்சிதைவு பிறகு மீண்டும் கருத்தரிக்க விரும்பினால் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துகொள்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.