கருவை சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் எல்லா வகையிலும் குறையில்லாமல் வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதே சமயம் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள் (Understanding Your Unborn Baby) என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கவனமாக இருக்க வேண்டும்.
அதனாலேயே உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், கர்ப்ப கால உடற்பயிற்சி என இதுவரை இருந்த பழக்கவழங்களை கூட தேவைப்பட்டால் மாற்றிகொள்ள தயங்கமாட்டார்கள். ஏனெனில் இவை எதுவுமே கருவின் ஆரோக்கியத்தை பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் என்பது தோராயமாக 10 மாதங்கள் என்று சொல்லலாம். கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கர்ப்பிணி பெண் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் அருகில் இல்லாத சூழலில் மருத்துவர்களின் ஆலோசனையை மட்டுமே பெற்று கருவை சுமக்கும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு அசெளகரியம் உண்டாக்கும் விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் அளித்திருக்கிறோம்.
வயிற்றில் வளரும் குழந்தையை தொல்லை செய்யும் விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளவே இந்த பொதுவான கட்டுரை என்றாலும் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் இது குறித்து அறிவதும் அவசியம்.
குழந்தை வயிற்றில் இருக்கும் போது கர்ப்பிணிகள் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன? அதற்கான காரணம் என்ன?
அதிக இரைச்சல் அல்லது அதிகமான சத்தம் இருக்க கூடாது
கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் எப்போதும் மென்மையான இசையை கேட்டு வேலை செய்வது நல்லது. தூக்கமின்மை நேரத்தில் கூட படுக்கையறையில் மெல்லிய இசையை ஓடவிட்டு படுக்கலாம் என்று சொல்வார்கள். அப்படி இருந்தால் பிறக்கும் குழந்தைகள் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள் என்றும் இது குறித்து ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால் இதுவே எல்லை மீறும் போது மிதமிஞ்சிய சப்தங்கள் கேட்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தைகள் அதை விரும்புவதில்லை.
வாகனங்களின் இரைச்சல், அதிக இரைச்சலோடு கூடிய பாடல்களை ஒலிக்கவிடுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அச்சத்தையும் பாதுகாப்பின்மையும் உண்டாக்கும். கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் குழந்தை தூங்கி கொண்டிருந்தாலும் கூட இந்த சத்தம் கேட்டு எழுந்து விடும்.
கர்ப்பகாலத்தில் அதிக இரைச்சல் இருக்கும் இடங்களில் சினிமா தியேட்டர், அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் இடங்கள் செல்ல கூடாது என்று சொல்ல காரணம் கூட இதுதான். உங்களுக்கு பாடல்கள் பிடிக்கும் என்றாலும் மனதை வருடும் மெல்லிய இசையை கேட்டு வந்தால் குழந்தை ஆனந்தமாக தூங்கும்.
கர்ப்பிணி பெண்கள் பட்டினி இருக்க கூடாது
தினசரி உணவில் ஒரு வேளையை தவிர்த்தால் கூட பசி வயிற்றை கிள்ளும். விரத நாட்களில் உணவை தவிர்த்து திரவ ஆகாரங்கள் எடுப்பதன் மூலம் வயிற்றை திருப்திபடுத்துகிறோம். ஆனால் கர்ப்பகாலத்தில் எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்க கூடாது. சிலர் ஒரு வேளை உணவை தவிர்த்தாலும் மயக்கநிலை வரை செல்லலாம். வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கவில்லை எனில் தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுவதும் கிடைக்காது. கர்ப்ப கால உணவு முறை சரியாக பின்பற்ற வேண்டும்.
அதிலும் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் கர்ப்பிணி போதுமான உணவை எடுத்தாலும் கூட உணவு நேரம் தவறும் போது குழந்தை பசியால் வேகமாக உதைக்க தொடங்குவார்கள். அதிக அசைவை வெளிப்படுத்தி தன் பசியை வெளிப்படுத்துவார்கள். கோபம், பிரச்சனை என்பதோடு நெஞ்செரிச்சலை காரணம் காட்டி உணவை மறுத்தாலும் அது குழந்தைக்கு அசெளகரியமானது. உணவு குமட்டல் இருந்தாலும் சிறிது சிறிதாக நாள் ஒன்றுக்கு ஆறு வேளை உணவாக அவ்வபோது எடுத்துகொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மனநிலை ஆரோக்கியம் அவசியம்
தாயின் மன உணர்வுகளில் எப்படி மாற்றம் உள்ளதோ அதே போன்று தான் குழந்தையின் உணர்வுகளிலும் மனநிலை இருக்கும். குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகும் இதை பார்க்கலாம். மனச்சோர்விலும் கவலையிலும் பதட்டத்திலும் கர்ப்பிணிகள் இருந்தாலே அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்க செய்யலாம்.
மனதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள கர்ப்பகாலம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க அதற்கான சூழ்நிலைகளை வளர்த்து கொள்ள வேண்டும். வன்முறை நிறைந்த விஷயங்களை டீவியில் கூட பார்க்க கூடாது. அப்படியான புத்தகங்களை கூட படிக்க கூடாது. மாறாக தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகங்கள், தோட்டக்கலை, டிராயிங் போன்றவற்றோடு உங்களுக்கு பிடித்த விஷயங்களிலும் ஈடுபடலாம்.
கர்ப்பிணிகளுக்கு பயணங்கள் அதிகம் வேண்டாம்
பயணம் செய்யும் போது அசெளகரியம் இல்லாமல் செல்லவே விரும்புவோம். அது போல் தான் வயிற்றில் இருக்கும் குழந்தையும் அமைதியாக இருக்கவே விரும்பும். வீட்டு வேலைகள், உடற்பயிற்சிகள் செய்தாலும் வீட்டில் செய்து ஓய்வாக இருக்க வலியுறுத்துவது கூட இதனால் தான்.
கர்ப்பகாலத்தில் அதிக பிரயாணங்கள் கூடாது என்று சொல்வதுண்டு. ஏனெனில் மேடு பள்ளங்கள் உள்ள சாலைகளில் பயணம் செல்வதால் உண்டாகும் உடல் அதிர்வுகள் குழந்தைகக்கு அசெளகரியத்தை உண்டாக்கும். அந்த மாதிரியான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் அடிக்கடி தேவையற்ற பயணம் செய்வதும் தனியாக டூவீலர் ஓட்டுவதும், சீரற்றசாலைகளில் பயணம் செய்வதையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகளை தவிர்த்திட வேண்டும்
உணவுகளின் ருசியை குழந்தையும் உணரும் என்பது தெரியுமா? குழந்தைகள் முதல் மூன்று மாதங்களில் முதல் ட்ரைமெஸ்டர் முடிந்த நிலையில், உணவை சுவைக்கவும் அல்லது உணரவும் செய்வார்கள் என்கிறது ஆய்வு. ஒன்று கர்ப்பகாலத்தில் எப்போதும் அதிக மசாலாக்கள் சேர்த்த, காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது கர்ப்பிணிக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனையை உண்டாக்குவது போன்று குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்காத துரித உணவுகள், குப்பை உணவுகளையும் கர்ப்பகாலத்தில் விலக்குவது நல்லது. பிடித்தாலும் இல்லையென்றாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இந்த காலத்தில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துகொள்வது மட்டுமே பலன் கிடைக்கும்.
அதிக வெளிச்சம் வேண்டாம்
கர்ப்பகாலத்தில் மருத்துவ சிகிச்சை தேவையெனில் அவசியமின்றி மருத்துவரின் பரிந்துரையின்றி எக்ஸ்ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும் . அதிலிருந்து வெளிப்படும் ஒளி வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்க செய்யலாம்.
தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் கண்களுக்கு வெளிச்சம் பழக்கப்படாத ஒன்று. அதிக வெளிச்சம் வயிற்றில் படும் போது குழந்தைக்கு அசெளகரியத்தை உணர்த்தலாம். அறைகளில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துகொள்வதும். வெளிச்சம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் படுக்கையில் புரள்வது கூடாது
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு டிரைமெஸ்டரில் படுக்கும் நிலைகள் மாறுபடும். எந்த நிலையிலும் குழந்தையை தொல்லை பண்ணாத போஸ்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். மல்லாந்து படுக்க கூடாது குழந்தை நெஞ்சில் ஏறிவிடும், குப்புறப்படுக்க கூடாது குழந்தைக்கு மூச்சு முட்டும் என்றெல்லாம் கர்ப்பிணிகளை பெரியவர்கள் அறிவுறுத்துவதுண்டு. அதற்கு காரணங்கள் உண்டு. கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
குழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க தாய்க்கு படுத்து உறங்குவதில் சிரமம் உண்டாகலாம். தூக்கமின்மை ஏற்படலாம். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பார்கள். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அசெளகரியத்தை உண்டாக்கலாம். தூங்கும் போது அப்படியே புரண்டு திரும்பாமல் எழுந்து உட்கார்ந்து பிறகு மறுபக்கம் ஒருக்களித்து படுக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் வயிற்றை அழுத்த கூடாது
குழந்தை வளர வளர, தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் அசைவுகள் பார்க்கவும் முடியும். கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் குழந்தையின் அசைவை உணரும் நிலையில் குழந்தை வளர வளர வயிற்றின் மேற்புற தசைகளில் குழந்தையின் அசைவை எல்லோருமே பார்க்கலாம். குழந்தையை அசைக்கிறேன் என்று தாயின் வயிற்றை அழுத்துவது, குழந்தை காலால் உதைக்கும் அசைவுகளை கண்டு கைகளால் குத்தி பார்ப்பது, அழுத்துவது போன்றவை எல்லாமே குழந்தைக்கு அதிக தொல்லையை உண்டாக்க செய்யும்.
கர்ப்பிணி பெண்கள் வயிறு குலுங்க சிரிப்பது கூடாது
கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது ஆரோக்கியமானது. ஆனால் வயிறு குலுங்க குலுங்க சிரிப்பது குழந்தைக்கு அசெளகரியத்தை உண்டாக்கும்.
கர்ப்பிணி வேகமாக சிரிப்பது வயிறு தசைபிடிப்பை உண்டாக்கலாம். சிரிக்கும் போது அசைவுகளினால் குழந்தைக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் குலுங்கி கொண்டே இருந்தால் குழந்தைக்கு எப்படி பிடிக்கும். எப்போதாவது இந்த நிகழ்வு பிரச்சனையில்லை. ஆனால் எப்போதும் குலுங்கி குலுங்கி சிரித்தால் குழந்தை அதிக அசெளகரியத்தை எதிர்கொள்ளும்.
கர்ப்பமாக இருக்கும் பெண் அழக்கூடாது
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், கவலை, சோர்வு போன்றவற்றை விட மோசமான நிலையை குழந்தைக்கு உண்டாக்குவது தாயின் அழுகை தான். கர்ப்பிணி கர்ப்பகாலம் முழுமையும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். சூழ இருப்பவர்களும் கர்ப்பிணியின் மனதை பாதிக்கும் எந்த செயலையும் செய்யகூடாது . ஏனெனில் கர்ப்பிணியின் எண்ணம், உணர்வுகள் எல்லாமே வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். கர்ப்பிணி அழும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் அந்த தாக்கம் இருக்கும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!
கர்ப்பகாலத்தில் செய்ய கூடாத விஷயங்களாக மேற்கண்டவை எல்லாமே சொல்லப்பட்டுள்ளது. இனி உங்கள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பாக இருப்பீர்கள் தானே!